4 வரிகளில் கடிதம் எழுதி கருணை காட்டக் கோரிய கசாப்!
உருதில் தனது கைப்பட இந்த கருணை மனு கடிதத்தை எழுதியிருந்தான் கசாப். அந்த கடித விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
2012ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது கசாப் தூக்கிலிடப்பட்டு ஒரு மாதம் முடிந்த நிலையில் அது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளுடன் கொச்சையான உருதில் மனுவை எழுதியுள்ளான் கசாப்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கருணை மனுவை பெற்றுள்ளார் லக்னோவைச் சேர்ந்த ஊர்வசி சர்மா என்ற சமூக நல ஆர்வலர்.
அக்கடிதத்தில் கசாப் கூறுகையில், ஐயா, சுப்ரீம் கோர்ட் எனக்கு மரணமடையும் வரை தூக்கிலிடும் தண்டனையை விதித்துள்ளது. இதிலிருந்து எனக்கு விலக்கு அளித்து, என்னை தூக்கிலிடுவதிலிருந்து காக்குமாறு மிகவும் பணிவுடன், மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். இது எனது தாழ்மையான வேண்டுகோள் என்று கூறியுள்ளான் கசாப்.
இந்தக் கருணை மனுவைத்தான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2012, நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார். இதையடுத்து நவம்பர் 21ம் தேதி புனே சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டான்.