பெண்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை, டி.ஜே. பார்ட்டி நடத்தினால் ரூ.11,000 அபராதம்: கப் பஞ்சாயத்து
ஹிசார்: ஹிசார் கிராமத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய கப் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் கிராமத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த கப் பஞ்சாயத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில் இளம்பெண்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய தற்போது பஞ்சாயத்தார்கள் தடை விதித்துள்ளனர். கேதர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாயத்து தலைவர் ஷம்ஷேர் சிங் கூறுகையில்,
கற்பழிப்பு சம்பவங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளதாக அதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் மாணவிகள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய தடை விதித்துள்ளோம் என்றார்.
பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட சாந்தி தேவி என்ற நடுத்தர வயது பெண் கூறுகையில், பஞ்சாயத்து நல்ல முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். ஒழுங்காக ஆடை அணியாதது தான் கற்பழிப்புக்கு முக்கிய காரணம் ஆகும் என்றார்.
ஹிசார் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் மகாவீர் சிங் கூறுகையில், பஞ்சாயத்து முடிவை வரவேற்கிறோம். யாராவது டிஜே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தால் அவர்களுக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளதால் கிராமத்தில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் எங்களின் முக்கிய நோக்கம் என்றார்.
செல்போன் தடைக்கு இளம்தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏதாவது ஒன்று நடந்தால் பெற்றோருக்கோ, போலீசாருக்கோ தகவல் கொடுக்க செல்போன் தானே உதவியாக இருக்கும் என்கின்றனர்.