ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 571 கேள்விகளில் 250க்கு 'தெரியாது' என்று பதிலளித்த இளவரசி
பணம் குறித்த 250 கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜரான இளவரசி 211 கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று மீண்டும் ஆஜரான அவர் 360 கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோரின் வங்கி கணக்களுக்கு வந்த பணம், காசோலை வழங்கல் மற்றும் பணம் எடுத்தது குறித்து 250 கேள்விகள் கேட்கப்பட்டது. பணம் சம்பந்தப்பட்ட 250 கேள்விகளுக்குமே தெரியாது என்று பதில் அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொடநாடு எஸ்டேட் மற்றும் குணபூசனியில் நான் பங்குதாரராக உள்ளேன். இதன் மூலம் வங்கியில் ரூ.3.85 கோடி கடன் கேட்டு மனு கொடுத்தது உண்மை. மன்னார்குடி இந்தியன் வங்கியில் என் பெயர், என் மகன் விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரின் பெயர்களில் பணம் போட்டிருப்பது உண்மை.
போயஸ் கார்டனில் நானும், என் மகன் விவேக்கும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், அவர் மனைவி சத்யலட்சுமியுடன் வசித்ததாகக் கூறும் ஜெயராமனை நான் அங்கு பார்த்ததே இல்லை. எனது வாக்காளர் அட்டையில் நான் கடந்த 1988ம் ஆண்டு போயஸ் கார்டனில் வசித்ததாக கூறுவது முறையன்று. சொல்லப் போனால் 1988ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை.
நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், லெட்ஸ் பிராப்பர்ட்டி, மெடோ அக்ரோ பார்ம், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், ஜெயா பப்ளிகேஷன், ரிவர்வே அக்ரோ புராடெக்ட்ஸ், ஜெ. பார்ம் ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கிக் கணக்குகளுக்கு லட்சக் கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.