இந்திய வீரர்கள் கொடூரக் கொலை- விளக்கமளிக்க பாகிஸ்தான் தூதருக்கு சம்மன்
டெல்லி: இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் தர பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள்ளே அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படையினர்,இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 13 ஆவது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த கொடூரச் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்
இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயலுக்கு இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் செயல் மனிதாபிமானமற்றது என்று கூறிய அந்தோணி, இதனை கவனமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உணர்ச்சிப்பூர்வமானது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்த விசயத்தை இரு நாடுகளும் கவனமாக கையாளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.