ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி.. கொடுத்த வாக்கை காப்பாற்றாத பாஜக: ஆட்சியை கவிழ்த்துவிட்ட சிபுசோரன்..
ராஞ்சி: ஜார்க்கண்டில் அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கட்சி வாபஸ் பெற்றதையடுத்து அங்கு பாஜக ஆட்சி கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைப்பதைத் தவிர்க்க சட்டசபையைக் கலைக்குமாறு பாஜக கோரியது. ஆனால், வேறு காரணத்துக்காக அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கவுள்ளது மத்திய அரசு.
பாஜக ஆட்சிக்கு வந்தது எப்படி?:
82 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் பாஜகவுக்கு 18 எம்.எல்.ஏக்களும், ஜே.எம்.எம். கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இந்த இருகட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தன. மேலும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் 6 எம்.எல்.ஏக்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள், 2 சுயேச்சைகள் மற்றும் நியமன எம்.எல்.ஏ ஒருவரும் இந்த அரசுக்கு ஆதரவளித்து வந்தனர்.
கவிழ்ந்தது எப்படி?:
இந்த ஆட்சி அமையும்போது 28 மாதங்களுக்குப் பின் ஜே.எம்.எம். கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக பாஜக முதலில் கூறியிருந்தது. இதையடுத்து 28 மாதங்கள் முடிந்த நிலையில் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரனை முதல்வராக்க வேண்டுமென்று அந்தக் கட்சி பாஜகவிடம் வலியுறுத்தியது. ஹேமந்த் சோரன், சிபு சோரனின் மகன் ஆவார்.
ஆனால் அப்படி எந்த ஒப்பந்தமும் நாம் போடவில்லை என்று பாஜக பல்டியடித்துவிட்டது. இதையடுத்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜே.எம்.எம். திங்கள்கிழமை அறிவித்துவிட்டது. சிபு சோரன், அவரது மகன் ஹேமந்த் சோரன் உள்பட ஜே.எம்.எம். எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரைச் சந்தித்து, பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர். இதையடுத்து 28 மாத கால அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்ந்தது.
சட்டசபையை கலைக்க கோரும் பாஜக:
தனது ஆட்சி போய்விட்டதால் அங்கு வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற திட்டத்துடன் சட்டசபையைக் கலைக்குமாறு ஜார்க்கண்ட் ஆளுநர் சையீத் அகமதைச் சந்தித்து முதல்வர் அர்ஜுன் முண்டா கோரிக்கை வைத்தார்.
அவர் கூறுகையில், எனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் தந்துவிட்டேன். சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டுமென்ற அமைச்சரவையின் பரிந்துரையையும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பேரம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பேரவையைக் கலைக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
சட்டசபையைக் கலைக்க காங்கிரஸ் எதிர்ப்பு:
இந் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து டெல்லியில் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷகீல் அகமது, தங்கள் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பதால் சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டுமென்று ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால் மைனாரிட்டி அரசின் சிபாரிசை கவர்னர் ஏற்க வேண்டியதில்லை. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்து அரசு மைனாரிட்டி அரசாகி விட்டது. இதனால் அந்த அரசின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆட்சியமைக்க ஜே.எம்.எம். முயற்சி:
ஜார்க்கண்டில் காங்கிரசுக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்களும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மார்க்சிஸ்ட் ஒத்துழைப்புக் கட்சி, ஜார்க்கண்ட் கட்சி (எக்கா), ஜார்க்கண்ட் ஜந்திகர் மஞ்ச், ஜெய்பாதர் சம்தா கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு எம்.எல்.ஏவும், ஒரு சுயேச்சையும் உள்ளனர்.
இவர்களது ஆதரவோடு தனது தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் தயாராகவே இருந்தாலும் ஜே.எம்.எம். கட்சியை எந்த அளவுக்கு நம்புவது என்று காங்கிரஸ் திணறி வருகிறது. ஜேஎம்எம் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டுமென்று லாலு பிரசாத்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபுசோரன் குறித்த காங்கிரஸ் பயம்...
சிபுசோரன் ஒரு மாதிரியான ஆள். நேரத்துக்கு ஒன்று பேசுவார், செய்வார். இதனால் அவரை நம்பி ஆட்சிக்கு வந்து, அடுத்த 2 மாதத்தில் ஆட்சியை அவர் கவிழ்த்தால் என்ன செய்வது என்ற அச்சம் காங்கிரசிடம் உள்ளது.
ஆனாலும் சிபுசோரன் டெல்லிக்கு வந்து காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது ஜேஎம்எம் தலைமையில் ஆட்சி அமைக்கலாம், அதற்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்று சோரன் கோர வாய்ப்புள்ளது.
ஆனால் இதுவரை சோனியாவை சந்திக்க சோரனுக்கு அப்பாயின்மெண்ட் தரப்படவில்லை. இதனால் புதிய அரசு அமைவதற்கான சூழ்நிலை மங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.
ஜனாதிபதி ஆட்சி..
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் மனநிலையில் காங்கிரஸ் உள்ளதாகத் தெரிகிறது. பாஜக கூட்டணியின் குளறுபடிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணி அரசுகள் வருவதும் போவதும் ஜார்க்கண்ட்டில் புதிதல்ல. அங்கு கடந்த 12 ஆண்டுகளில் 8 அரசுகள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தனிப்பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைவதே இல்லை.
இது காங்கிரஸ் ஸ்டைல்..
ஆனால், இவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கிவிட்டது காங்கிரஸ். இதனால் அடுத்த தேர்தலில் பாஜக, சிபு சோரன் தனித்தனியே போட்டியிட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, இடையில் புகுந்து அதில் ஆதாயம் அடைய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கூட்டணி அரசுகள் வருவதும் போவதும் ஜார்க்கண்ட்டில் புதிதல்ல. அங்கு கடந்த 12 ஆண்டுகளில் 8 அரசுகள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தனிப்பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைவதே இல்லை.