தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றபோது தேக்கடியில் சிக்கிய 51 இலங்கை அகதிகள்
கம்பம்: தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 51 பேர் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்றபோது தேக்கடி ரோட்டில் போலீசாரிடம் சிக்கினர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கை அகதிகள் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை, ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கி இருந்த 28 பெண்கள், 10 ஆண்கள், 13 குழந்தைகள் என 51 பேர் ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து அவர் மூலம் அரசின் அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்தனர்.
இதையடுத்து அவர் 3 வேன்களில் குமுளி வழியாகச் செல்ல கிளம்பினர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த கேரள போலீசார் தமிழக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமுளிக்கு கிளம்பிச் சென்று தேக்கடி ரோட்டில் தங்கியிருந்த 51 அகதிகளையும் அழைத்து வந்து கம்பத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த பிறகு அவர்கள் ஏற்கனவே தங்கிய முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.