5612 சிறப்பு பேருந்துகள்: பொங்கலுக்கு இயக்க முதல்வர் உத்தரவு
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளை செய்து தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 11-ம் தேதியன்று 1,280 சிறப்பு பேருந்துகளும், 12-ம் தேதி 1,315 சிறப்பு பேருந்துகளும், 13-ம் தேதி 312 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 11-ம் தேதி 730 சிறப்பு பேருந்துகளும், 12-ம் தேதி 745 சிறப்பு பேருந்துகளும், 13-ம் தேதி 1,230 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தத்தில் 5,612 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், 4 நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையினை கோலாகலமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்ப வசதியாக, இதே அளவிலான பேருந்துகளை 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
கணினி முன்பதிவு மையம்
பொங்கல் பண்டிகையையொட்டி 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையின் அடிப்படையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். இதுதவிர, கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் 24794709 என்ற தொலைபேசி எண் அமைக்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.