நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே தொடரும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திருச்சி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது. மேலும் எங்கள் கட்சிக்கு ஏணி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் இனி மேல் உள்ளாட்சி முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள திமுக கூட்டணியும், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியும் தொடரும்.
பிற மாநிலங்களில் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை ஆய்வு செய்து அதற்கேற்ப கூட்டணி அமைக்க கேரளாவில் பஷீர் எம்.பி. தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாடு முழுவதும் பயணம் செய்து அரசியல் சூழலை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையைப் பார்த்துவிட்டு தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான தேசிய பயிலரங்கம் வரும் மார்ச் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் பரிந்துரைகளின்படி முஸ்லிம்களுக்கு மத்திய-மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் மாநில தலைநகரங்களில் பேரணி நடைபெறும்.
தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சனையால் சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன. முதல்வர் நினைத்திருந்தால் இந்த பிரச்சனையை எளிதாக தீர்த்து வைத்திருந்திருக்கலாம். திமுகவின் தலைவர் பதவிக்கு முக ஸ்டாலின் பெயரை கருணாநிதி முன்மொழிந்தது அனைத்து தரப்பும் ஏற்றுக் கொண்டது தான் என்றார்.