டெல்லி மாணவியை பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 'அப்பெண்டிக்ஸ்' ஆபரேஷன்
டெல்லி: டெல்லியில் பிசியோதெரப்பி மாணவியை கொடூரமாக இருமுறை பலாத்காரம் செய்தும், இரும்புத் தடியால் கடுமையாக தாக்கியும் அவரது உயிரிழப்புக்குக் காரணமான சிறுவனுக்கு டெல்லி மருத்துவமனையில் ரகசியமான முறையில் குடல்வால் நீக்க அதாவது அப்பெண்டிக்ஸ் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.
தெற்கு டெல்லியில் கடந்த டிசம்பர் 16ம் தேதி இரவு 23 வயதான பிசியோதெரப்பி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் ஓடும் பஸ்சில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். உயிருக்காக போராடிய அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த ஆறு மனித மிருகங்களையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் 17 வயதான சிறுவன். ஆனால் இவன்தான் அந்த மாணவியை மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்தவன். அதாவது 2 முறை பலாத்காரம் செய்தான். மேலும், இரும்புத் தடியாலும் தாக்கினான். இதனால்தான் அந்த மாணவியி்ன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.
இவன் மைனர் என்பதால் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.இவனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அவனை லோக்நாயக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.மிகவும் ரகசியமான முறையில் இவனை அழைத்துச் சென்றனர். அங்கு அவனுக்கு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதில் குடல்வால் வீக்கம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய முடிவானது.
அதன் பின்னர் அவனுக்கு அங்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சை முடியும் வரை அந்த சிறுவன் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால்அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன்தான் டாக்டர்களிடம் அவன் யார் என்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டதாம். அதைக்கேட்டு டாக்டர்கள் அதிர்ந்து போய் விட்டனராம்.
இதுகுறித்து ஒரு டாக்டர் கூறுகையில், சிறுவனை போலீசார் இங்கு கொண்டு வந்தபோது அவன் யார் என்ற விபரம் எங்களுக்குத் தெரியாது. அது பற்றிய விபரத்தையும் நாங்கள் போலீசாரிடம் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவன்தான் டெல்லி மாணவி கொடூர கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மைனர் எனத் தெரிய வந்தபோது எங்களுக்கு லேசான அதிர்ச்சி.
அமைதியாகவும், நாகரீகமான முறையிலும் எங்களிடம் நடந்து கொண்டான். அவனது நடத்தை எங்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியத்தை தந்தது. தற்போது அவன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றாலும் அவனுக்கு ஆபரேஷன் காரணமாக 2 நாட்கள் தங்கி இருப்பான் என்றார்.