அசாமில் பள்ளி அருகே குண்டுவெடிப்பு: 3 குழந்தைகள் பலி நால்வர் படுகாயம்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் திக்போய் நகர் அருகே தொடக்கப்பள்ளியில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். நான்குபேர் படுகாயமடைந்தனர்.
திக்போய் நகர் அருகில் உள்ள கார்ஜன் தொடக்கப் பள்ளியின் அருகே கான்கிரீட் குழாயினுள் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த குழாயின் அருகே பள்ளிக்குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது அப்போது பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஒரு பள்ளிச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இரண்டு மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தனர். மேலும் நான்கு பேர் மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
அசாம் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று உள்துறை செயலாளர் ஜி.டி.திரிபாதி தெரிவித்தார். கவுகாத்தியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திக்போய் நகரில்தான் முதல் முதலாக கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.