சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து
ஷில்லாங்/அகர்தலா/கோஹிமா: மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய 3 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன.
மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகியவற்றின் சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மார்ச் 2-வது வாரத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
ஒரே நாளில் தேர்தல்?
3 மாநில சட்டசபைகளும் தலா 60 தொகுதிகளை கொண்டுள்ளன. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறக் கூடும்.இந்த 3 மாநிலங்களிலும் அனேகமாக ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
மேகலாயாவில் மோதல்
தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால் 3 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 60 வேட்பாளர்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். இதில் சிலருக்கு டிக்கெட் மறுக்கப்பட போட்டி வேட்பாளர்களாக இறங்கப் போகின்றனர். இந்த நிலையில் தேசிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள பி.ஏ.சங்மா 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளார். இதனால் மேகாலயாவில் காங்கிரசுக்கும், சங்மா கட்சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கம்யூ தக்க வைக்குமா திரிபுராவை?
கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு கொண்ட திரிபுராவில் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க இடதுசாரிகள் முனைப்பு காட்டுகின்றனர்.
நாகலாந்து
நாகலாந்து மாநிலத்தில் நாகலாந்து மக்கள் முன்னணிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் நாகலாந்து மக்கள் முன்னணி 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.