'கடலை' ராமலிங்கத்திடம் இருந்த ரூ.28,000 கோடி அமெரிக்க பத்திரங்கள் 'டுபாக்கூர்'
சென்னை: தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் (US Treasury bonds) போலியானவை என்று பார்க்லேஸ் வங்கி தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரியான ராமலிங்கம் (47) வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28,000 கோடி) மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் சிக்கின.
திடீரென வந்த ரூ. 2 கோடி பணம்...
இதையடுத்து இவரது வங்கி லாக்கரில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன.
பார்க்லேஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு வங்கிகளின் இந்தியக் கிளைகள் மூலமாக இவர் செய்த சில பணப் பரிவர்த்தனைகள் சந்தேகத்துக்குரியதாக இருந்தன. குறிப்பாக எந்தவிதமான வெளிநாட்டுத் தொழிலிலும் ஈடுபடாத இவரது வங்கிக் கணக்குகளுக்கு திடீரென ரூ. 2 கோடி பணம் வந்தது.
வருமான வரித்துறையை அலர்ட் செய்த வங்கிகள்..
இதையடுத்தே வருமான வரித்துறையினருக்கு அந்த வங்கிகள் தகவல் தந்தன. இதைத் தொடர்ந்து தான் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ரூ.28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் சிக்கியதையடுத்து நாடே அதிர்ந்து போனது. ஆனாலும் இவரிடம் விசாரித்தபோது இவர் ஒரு டுபாக்கூர் என்பது உறுதியானது.
இதனால் இந்த அமெரிக்க கருவூல பத்திரங்கள் போலியானவையாகவே இருக்கக் கூடும், இதைக் காட்டி யாரோ சிலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ய இவர் திட்டமிட்டிருக்கலாம் என்பதையும் உணர்ந்த வருமான வரித்துறையினர் உடனே அமலாக்கப் பிரிவினரையும் அலர்ட் செய்தனர்.
உடம்பெல்லாம் பொய்...
இவரை வருமான வரித்துறையினர் 2 முறை கூப்பிட்டு விசாரித்தபோது, கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலில் ஈடுபட அனுமதி கேட்டு பெட்ரோல் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இடமும் வாங்கியுள்ளதாகவும், இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்தத் தொழிலில் ரூ. 1.5 லட்சம் கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், இதன்மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் தரப் போவதாகவும் ராமலிங்கம் உளறினார்.
பார்க்லேஸ் வங்கி உதவி....
இவரது பேச்சால் தலை சுற்றிப் போன வருமான வரித்துறையினர், இந்தப் பத்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து தருமாறு பார்க்லேஸ் வங்கியிடம் கோரினர்.
அவர்கள் அமெரிக்க கரூவூலத்துறையினரின் உதவியோடு நடத்திய விசாரணையில் இந்தப் பத்திரங்கள் போலியானவை என்பது உறுதியாகியுள்ளது.
பிரேசில் 'பாண்டி'...
ஆனாலும் இவை உண்மையான பத்திரங்கள் தான் என்றும், இதை பிரேசிலைச் சேர்ந்த ஒரு நபர் தன்னிடம் தந்ததாகவும் ராமலிங்கம் தொடர்ந்து கூறிக் கொண்டுள்ளார். இதனால், இந்தப் பத்திரங்களை பிரேசிலைச் சேர்ந்த நபர் அந்த நாட்டில் அச்சடித்து இவரிடம் தந்திருக்கலாம் என்றும், இருவருமே மகா பிராடுகளாக இருப்பார்கள் என்றும் வருமான வரித்துறையினர் கருதுகின்றனர்.
இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை ஏமாற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் செய்த பிராடுத்தனம்:
மேலும் ராமலிங்கத்திடம் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், இவர் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்திடம் ரூ. 2 கோடி அளவுக்கு சுருட்டியதும் தெரியவந்துள்ளது. இந்திய நிதி நிறுவனங்களிடம் இருந்து சில ஆயிரம் கோடி கடன் வாங்கிக் தருவதாகக் கூறி, இந்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் முன் கமிஷனாக ரூ. 2 கோடியை சுருட்டியுள்ளார். இந்தப் பணம் தான் இவரது இந்திய வங்கிக் கணக்குகளுக்கு வந்துள்ளது.
ஆனாலும், இவர் மோசடி செய்ததாக சிங்கப்பூர் நிறுவனம் புகார் தராதவரை ராமலிங்கம் மீது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது என்கின்றனர் வருமான வரித்துறையினர்.
புது வீடு, புது காரு..
திவால் நோட்டீஸ் கொடுத்த டம்மி பீஸான ராமலிங்கம் சமீப காலமாக புது வீடு, புது காரு.. என ஊரில் அலப்பறை காட்டியுள்ளார். சிங்கப்பூர் நிறுவனத்தை ஏமாற்றிய சுருட்டிய ரூ. 2 கோடியில் தான் இவர் இந்த ஆட்டம் போட்டதாகவும் தெரிகிறது.
மேலும் இவர் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார், யார் அந்த பிரேசில் 'பாண்டி', இந்த மோசடி அமெரிக்க பத்திரங்களை நம்பி அதில் முதலீடு செய்ய இவரிடம் எந்த அரசியல்வாதியாவது அல்லது தொழிலதிபராவது ஏமாந்தார்களா என்பது தெரியவில்லை.
ஏமாந்த யாரும் புகாரும் தரப் போவதில்லை:
அமெரிக்கப் பத்திரங்கள் போலியானவை என்பதால் வருமான வரித்துறை இனி இந்த விவகாரத்திலிருந்து விலகிக் கொள்ளும், வெளிநாட்டுப் பணம் வந்துள்ளதால் அமலாக்கப் பிரிவே விசாரணையைத் தொடரும், யாராவது ஏமாந்ததாக புகார் வந்தால் மட்டுமே போலீசும் களமிறங்கும்.
இவரிடம் யாராவது பணம் தந்து ஏமாந்து இருந்தாலும் அது பெரும்பாலும் கருப்புப் பணமாகவோ அல்லது பினாமி பணமாகவோ தான் இருக்கும். இதனால் யாரும் புகாரும் தரப் போவதில்லை.
இதனால் கடலை ராமலிங்கம் மீது பெரிய அளவில் நடவடிக்கைகள் ஏதும் பாய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
போலியில்லை என்கிறார் ராமலிங்கம்..
இந் நிலையில் இது குறித்து ராமலிங்கம் கூறுகையில், என்னிடம் வருமானவரித் துறையினர் கைப்பற்றிய பத்திரங்களை போலியானது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் உண்மையானவை. போலி என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு அனுமதித்தால் கச்சா எண்ணை ஆலை தொடங்கி 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன். நான் எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு அரசும், ஆண்டவனும், மக்களும் துணை நிற்பார்கள்.
உஷ்... அப்பப்பா!