மக்கள் தலையில் அடுத்த குண்டு… செல்போன் கட்டணங்கள் உயர்வு
ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது சேவை கட்டணத்தை 30 சதவீதம் அதிகரித்துவிட்டது. 1 ஜிபி (2 ஜி) கட்டணத்தை ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
கட்டண சீரமைப்பில் ஒரு எம்பிக்கு 3 காசு வரையே அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை பாதிக்காது என்று ஏர்டெல் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடாபோன் நிறுவனமும் போன் கட்டணங்களை சீரமைத்துள்ளது. ரூ.95 திட்டம் ரூ.124 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சேவை கட்டணங்களையும் வோடாபோன் நிறுவனம் மாற்ற உள்ளது. இதையடுத்து மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் கட்டணத்தில் 30 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளன.
செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுநாள் வரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23 ஆயிரம் கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்தே செல்போன் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு நடுத்தர மக்களின் தலையில் சுமை ஏற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சியாக செல்போன் கட்டணம் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு வருகிறது.