பொங்கலுக்கு 1280 சிறப்புப் பேருந்துகள்: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கான சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று தொடங்கியது. போக்குவரத்துறைஅமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்து சேவையை தொடங்கிவைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழகம் முழுவதும் 5612 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி முதல் நாளான இன்று ஆயிரத்து 280 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் முன் பதிவு செய்வதற்காக 16 புதிய முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 150 ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று போக்குவரத்துத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகையையொட்டி மக்களின் வசதிக்காக 5612 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க முதல்வர் அம்மா உத்தரவிட்டிருந்தார். இதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் 16-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை ஊரில் இருந்து திரும்பி வருவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படுகிறன்றன.
300 கி.மீட்டருக்கு அதிகம் உள்ள பகுதிகளுக்கும் ஆன்லைனில் புக்கிங் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இப்போது 28,400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.93 லட்சத்து 22 ஆயிரம் வசூலாகி உள்ளது. பொங்கலுக்கு தாராளமாக பஸ் வசதி இருப்பதால் பொதுமக்கள் எப்போது வந்தாலும் பஸ் வசதி இருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்
சிறப்பு கண்காணிப்புக் குழு
பேருந்து நிலையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்துகள் அனைத்தும் மார்கெட் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடத்தில் நிறுத்தப்படும் எனவும் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க 6 சிறப்பு கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.