பாகிஸ்தானில் 4 பயங்கர குண்டுவெடிப்புகள்- 115 பேர் பலி, 200 பேர் காயம்
தீவிரவாதிகளின் தாயகமாக கருதப்படும் குவெட்டாவில் மட்டும் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குவெட்டா நகரில் உள்ள ஷியா சமூகத்தினரின் பில்லியர்ட்ஸ் அரங்கில் குண்டுவெடித்ததில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
ஷியா முஸ்லீம்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு சன்னி பிரிவு அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் இது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும், முதல் தாக்குதலுக்குப் பின்னர் ஒரு கார் வெடிகுண்டையும் அந்தத் தீவிரவாத அமைப்பு வெடிக்க் செய்துள்ளது.
சமீப காலத்தில் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரவாத தாக்குதல் இது என்று வர்ணிக்கப்படுகிறது.
குவெட்டாவைத் தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன. இங்குதான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால் தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிகள் போர்க்களம் போலக் காணப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.
குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.