அமெரிக்க 'டுபாக்கூர்' பத்திரங்கள்.. 'கடலை' ராமலிங்கம் முன் ஜாமீன் வாங்கினார்..
போலியான பத்திரங்களை வைத்திருப்பது குற்றச் செயல் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு வருமான வரித்துறையினர் போலீசாரிடம் கோரலாம் என்று தெரிகிறது.
தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரியான ராமலிங்கம் (47) வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28,000 கோடி) மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் சிக்கின.
ஆனால், இவை போலியானவை என்று தெரியவந்துள்ளது.
போலியான பத்திரங்களை வைத்திருப்பது குற்றச் செயல் என்பதால், இது குறித்து வருமான வரித்துறையினர் போலீசாருக்கு புகார் தந்து வழக்குப் பதிவு செய்யலாம்.
இந் நிலையில் தான் கைதாகலாம் என அஞ்சும் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இவரை வரும் 21ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இந்த அமெரிக்க கருவூல பத்திரங்கள் உண்மையானவை என்று கூறி வரும் ராமலிங்கம் அதை நிரூபித்தால், அதற்கான வரியைக் கட்டுமாறும் அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான வரி 30 சதவீதம் வரை, அதாவது, ரூ. 9,000 கோடி வரை இருக்கும்.