கறிவேப்பிலை கூட விலை உயர்ந்துவிட்டது... கருணாநிதி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விலைவாசி எப்படிக் குறைந்துள்ளது தெரியுமா?
முதல் ரகம் பச்சரிசி ஒரு கிலோ கடந்த 2012இல் 32 ரூபாய் என்று விற்றது, தற்போது ஒரு கிலோ 40 ரூபாய். இரண்டாம் ரக பச்சரிசி ஒரு கிலோ 2012-ல் 22 ரூபாயாக விற்றது, தற்போது 30 ரூபாய். பொங்கல் தயாரிக்க மிகவும் தேவையான வெல்லம் ஒரு கிலோ கடந்த ஆண்டு 35 ரூபாய், தற்போது அதன் விலை 42 ரூபாய்.
ஏலக்காய் கடந்த ஆண்டு ஒரு கிலோ 900 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விற்றது. தற்போது அதன் விலை 1000 ரூபாயிலிருந்து 1400 ரூபாய் வரை விற்கிறது. முந்திரி ஒரு கிலோ கடந்த ஆண்டு விலை 350 ரூபாய். தற்போது 425 ரூபாய். உலர் திராட்சை கடந்த ஆண்டு ஒரு கிலோ 180 ரூபாய். தற்போது அதன் விலை 225 ரூபாய். நெய் கடந்த ஆண்டு ஒரு கிலோ 280 ரூபாய். தற்போது 350 ரூபாய். இரண்டு கரும்புகளின் விலை கடந்த ஆண்டு 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்றது, தற்போது 35 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கிறது.
ஆட்டுக்கறி உச்சத்தில்
அசைவ வகைகளை எடுத்துக் கொண்டால், ஆட்டுக்கறி கடந்த 2012இல் ஒரு கிலோ 320 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்றது, தற்போது 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கிறது. நாட்டுக் கோழி கடந்த ஆண்டு ஒரு கிலோ 220 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்றது, தற்போது 320 ரூபாய் முதல் 350 ரூபாய் விற்கிறது.
கறிவேப்பிலை 2 மடங்கு
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கறிவேப்பிலையின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கறிவேப்பிலை ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கும், டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தற்போது கறிவேப்பிலை ஒரு கிலோ மொத்தவிலையில் 20 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோயம்பேடு சந்தை கறிவேப்பிலை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி நிலைமை. வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களை, விலைவாசி ; வேதனையின் உச்சிக்கே தள்ளிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.