அய்யப்[பன் கோவிலில் நாளை மகரவிளக்கு சிறப்பு பூஜை
குமுளி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மகர விளக்கு சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது.
அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் கடந்த 30-ந்தேதி மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 31-ந்தேதி முதல் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலை கோவில் நடை திறந்தது முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மகர விளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இதற்காக திருவாபரணங்கள் பெட்டி பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.
திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்ட பிறகு மாலை 6.30 மணி அளவில் சபரிமலை அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்தப்படும். அதே நேரத்தில் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதி தரிசனம் தெரியும்.
மகர ஜோதியை தரிசிப்பதற்காக வந்துள்ள பக்தர்கள் கடந்த 2 நாட்களாக மகரஜோதியை பார்க்க புல்மேட்டில் குடில்கள் அமைத்து தங்கி உள்ளனர். கடந்த 2011 ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கை தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது புல்மேட்டில்தான் 102 பேர் நெரிசலில் உயிர் இழந்தனர். இதனால் சன்னிதானம் பம்பை, புல்மேடு உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.