பஞ்சாபில் தாய் வீட்டில் இருந்து கணவர் வீட்டுக்கு பஸ்ஸில் சென்ற இளம்பெண்ணை கற்பழித்த 7 பேர்
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள ஜகத்பூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 29 வயது இளம்பெண் ஒருவர் குக்லாவில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு பேருந்தில் சென்றார். டிரைவர் தாலர் சிங் அப்பெண்ணை குக்லா நிறுத்தத்தில் இறக்கிவிடவில்லை. இதையடுத்து பேருந்தை நிறுத்துமாறு அப்பெண் கன்டக்டர் ரவியை கெஞ்சியும் பலனில்லை. வேறு ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய தாலர் சிங், ரவியுடன் சேர்ந்து அப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் வைத்து குர்தாஸ்பூர் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தாலர் சிங் மற்றும் ரவியுடன் சேர்ந்து மேலும் 5 பேர் அப்பெண்ணை கற்பழித்தனர். பின்னர் அவரை நேற்று காலை குக்லா அருகே விட்டுச் சென்றனர். இதையடுத்து அப்பெண் இந்த சம்பவம் குறித்து கனுவான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்த போலீசார் தாலர் சிங், ரவி, ஜஸ்விந்தர் சிங், ஜக்ப்ரீத் சிங், சத்வந்த் சிங் உள்பட 6 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
திருமணமான இளம்பெண் ஒருவர் 7 பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.