பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 வரை உயரும்
எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு கடந்த சில தினங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 28ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் போல் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.
இதனால் பட்ஜெட்டுக்கு முன்னதாகவே பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த தீர்மானித்து இருப்பதாக கூறப்படுகிறது.
அனேகமாக 'பொங்கல் பரிசாக' அடுத்த வாரம் இந்த விலை உயர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் தான் ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது வரும் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை நோக்கி போய்க் கொண்டுள்ளது. இந் நிலையில் டீசல், கேஸ் விலை உயர்த்தப்பட்டால், அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும்.
மானியம் அல்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ 100 வரை உயரும் என்று தெரிகிறது.