வாடகை மனைவிகள்: அரபு நாட்டுக்காரர்களுக்கு விருந்தாகும் இந்தியப் பெண்கள்!
மும்பை: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வருபவர்களுக்கு நாட்கணக்கில் இந்தியப் பெண்களை விலைபேசும் கும்பல் அதிகரித்து வருகிறது. மும்பை, ஹைதராபாத் நகரங்களில் இதுபோன்று வாடகைக்கு மனைவிகளை ஏற்பாடுசெய்யும் கும்பலை கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது மிட்டே நாளிதழ்.
அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஷேக்குகள் தங்களின் தேவைக்காக இந்தியப் பெண்களை திருமணம் கொள்கின்றனர். இந்தியாவில் இருக்கும் வரைக்கும் அந்தப் பெண்களை அனுபவித்துவிட்டு பின்னர் உடனடியாக விவாகாரத்து செய்துவிட்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிட்டே நாளிதழின் பெண் நிருபர் கிராந்தி விபுதேயும் ஆண் நிருபர் பூபன் படேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக உளவு பார்த்து அரபு ஷேக்குகளின் இந்த லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.
பெண் தேடும் படலம்
இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும் பெண் தேடும் படலத்தை தொடங்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள சில புரோக்கர்கள் அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு பெண்களை கூட்டி செல்கின்றனர்.
முறைப்படி திருமணம்
தங்களுக்கு பிடித்தமான அழகான பெண்களை தேர்வு செய்யும் ஷேக்குகள் மத முறைப்படி திருமணம் செய்து கொள்கின்றனர். பெண்ணை தேர்வு செய்த உடன் ரூ.15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பேசப்பட்டு பெண்ணுக்கு கைமாறி விடுகிறது. எத்தனை நாட்களுக்கு ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பின், ஷேக்கின் மனைவியாக இந்திய பெண் மாறுகிறாள். திருமணமும் முறைப்படி நடத்தி வைக்கப்படுகிறது.
கசக்கிப் பிழியப்படும் பெண்கள்
இந்தியாவில் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லும் ஷேக், தன் தேவைக்கு ஏற்ப விருப்பம் போல அந்த பெண்ணை பயன்படுத்துகிறார்.
குறைந்த பணம்தான்
அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு அவள் பெறும் பணத்தில் கொஞ்சமே கிடைக்கிறது. 50 சதவீத பணத்தை திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதமுள்ளதை பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.
உடனடியாக விவாகரத்து
விசா காலம் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும் சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும் அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண் இறுதியில் காகிதம் போல கசக்கி வீசப்படுகிறாள்.
மும்பை, ஹைதராபத்தில் சகஜம்
வாடகை மனைவிகள் கலாச்சாரம் மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது. இதனை மிட் டே நாளிதழ் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவை, திண்டுக்கல் நகரங்களில் இதுபோன்ற வாடகை மனைவிகள் கலாச்சாரம் பெருகி வந்ததைக் கண்டு போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த நாட்டுக்கே அழைத்துச் சென்று..
சிலர் இந்தப் பெண்களை வீட்டு வேலைக்கு என்ற பெயரில் சொந்த நாட்டுக்கே அழைத்துச் சென்று சில வருடங்கள் அவர்களை முறைகேடாக பயன்படுத்திவிட்டு, கொடுமைப்படுத்திவிட்டு திருப்பி அனுப்பும் கொடுமையும் நடந்து வருகிறது. அரபு ஷேக்குகள் மட்டுமின்றி மேலும் சில நாட்டினரும் இந்தக் கொடுமையைச் செய்தாலும் அதிக அளவில் இதில் ஈடுபடுவது இவர்களே. அதே போல இந்தியப் பெண்கள் மட்டுமின்றி மேலும் பல நாடுகளிலும் இந்தக் கொடுமை பிற நாட்டினரால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.