பாம்பன் பாலம் சேதம்: தனியார் கப்பல் நிர்வாகத்திடம் நஷ்டஈடு கேட்கும் ரயில்வே
ராமேஸ்வரம்: கப்பல் மோதியதால் சேதமடைந்த பாம்பன் ரயில்பாலத்தை செப்பனிட ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தனியார் கப்பல் நிர்வாகம் மீது ரயில்வேத்துறை அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கி கடல் வழியாக சென்ற பார்ஜார் கப்பல் மற்றும் அதனை இழுத்து வந்த "ஆதிநாத்" என்ற இழுவை கப்பல் பலத்த காற்று வீசியதால் பாம்பன் கடல் பகுதியில் கடந்த 10-ந்தேதி நிறுத்தப்பட்டிருந்தன.
அப்போது 2 கப்பல்களின் நங்கூரம் அறுந்தது. இதில் மிதவை கப்பல் அருகில் இருந்த பாம்பன் ரெயில் பாலத்தின் 121-வது தூணில் மோதியது.
இதனால் பாலம் சேதமடைந்ததால் ராமேசுவரத்திற்கு ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களின் கடும் முயற்சியினால் ரெயில் பாலத்தின் மீது மோதி இருந்த மிதவை கப்பல் மீட்கப்பட்டு நடுக்கடலுக்கு கொண்டு வரப்பட்டது. சேதம் அடைந்த ரெயில் பாலத்தின் 121-வது தூணை சீரமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
பாலத்தில் ஏற்பட்ட பழுதை கண்டறிய இந்திய ரெயில்வே பொறியாளர் லாலுசிங், மதுரை மண்டல பொறியாளர் ராம்பிரசாத், பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் 20 என் ஜினீயர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் சேதம் அடைந்த தூணை வலுப்படுத்தும் வகையில் அதனை சுற்றி 100 கிலோ எடை கொண்ட இரும்பு கிரில்களை தண்டவாள இரும்பு கர்டருடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன் பிறகு இரும்பு கிரில்களை சேர்த்து கெமிக்கல் கலந்த சிமெண்ட் கான்கிரீட் தூண் அமைக்கப்படுகிறது. கடல் சீற்றம் இல்லாமல் இருந்தால் குறிப்பிட்ட 7 நாட்களில் இப்பணிகள் முடியும். இல்லாவிடில் மேலும் சில நாட்கள் ஆகலாம் என தெரிகிறது. இந்த நிலையில் ரயில் சேதமடைவதற்கு காரணமான தனியார் கப்பல் நிறுவனத்தின் மீது ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு ரயில்வேதுறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கப்பல் மோதியதால் சேதம் அடைந்த தூணில் எங்கு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய கடலுக்குள் வேவ்ஸ் கருவியை செலுத்தி சிறப்பு நிபுணர்கள் கண்டறிய உள்ளனர்.
இழுவை கப்பலை மீட்க போராட்டம்
இந்நிலையில் "ஆதிநாத்" இழுவை கப்பல் பாம்பன் ரெயில் பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பாறையில் ஏறியுள்ளது. அதனை மீனவர்கள் நடுக் கடலுக்கு கொண்டு செல்ல எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இழுவைக் கப்பல் அதிக எடையுள்ளதால் இதனை மீட்க முடியவில்லை. எனவே தூத்துக்குடியில் இருந்து அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் பொருந்திய 2 கப்பல்கள் கொண்டு வரப்படும் என்று கடலூர் துறைமுக அதிகாரி அன்பரசு கூறியுள்ளார்.