மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 314 காளைகள்! 50 பேர் காயம்! ஐவருக்கு தீவிர சிகிச்சை!!
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழித்துக் கட்ட பிராணிகள் நலன் என்ற போர்வையில் சிலர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தும் வழக்குப் போட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் பிறகும் உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
இதைத் தொடர்ந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல் போட்டியாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை நடைபெற்றது. அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதசுவாமி கோயில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டது. வாடிவாசல் அருகே இருபுறமும் மூங்கில் தடுப்புகள் போடப்பட்டு இரும்பு வலை அமைக்கப்பட்டிருந்தது.
மேடை சரிவால் பரபரப்பு
நேற்று காலை 8.30 மணிக்கு போட்டி தொடங்கியது . போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென பரிசுப் பொருட்கள் இருந்த மேடை பார்வையாளர்களுடன் சரிந்து விழ பரபரப்பு ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். மேடை சரிவில் சிக்கிய 4 குழந்தைகளை போலீசார் காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி தொடங்கியது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மொத்தம் 314 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக சீறிய காளைகளை திடம் கொண்டு தீரமுடன் அடக்கினர் தமிழக மாடுபிடி வீரர்கள்!
5 பேர் படுகாயம்
மாடுகள் முட்டியதில் சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பூந்தோட்டம் நகர் முருகன், சோழவந்தான் குமரேசன், பிரகாஷ், சின்னக்கட்டளை வேல்பாண்டி, எஸ்.ஆலங்குளம் அழகுபாண்டி ஆகியோர் படுகாயமடைந்தவர்கள்...
பலியான ஜல்லிக்கட்டுக் காளை
இந்தப் போட்டியின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த ஒத்தக்கடை போலீசான திருவள்ளுவன் மீது சிலர் கல்வீசினர். இதில் அவர் நெற்றியில் காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற ஒத்தக்கடை அருகே காயாம்பட்டியைச் சேர்ந்த பிச்சையின் காளை ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருந்து தப்பித்து ஓடிபோது அரசுப் பேருந்து மீது மோதியதில் உயிரிழந்தது.