லோக்சபா தேர்தலை எப்படி நடத்தலாம்? எப்போது நடத்தலாம்?: விவாதிக்கக் கூடுகிறது காங்கிரஸ்!
ஜெய்ப்பூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அடுத்த கட்ட வியூகம் வகுக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற லோக்சபாவின் பதவிக் காலம் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ளது. ஆனால் முன்கூட்டியே இந்த ஆண்டின் இறுதியிலேயே தேர்தலை நடத்திவிட காங்கிரஸ் முனைப்பு காட்டுகிறது.
இதற்கான வியூகத்தை கடந்த நவம்பர் மாதம் காங்கிரஸ் தொடங்கியது. லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அத்துடன் ராகுலின் நம்பிக்கை தளபதிகள் 50 பேர் நாடு முழுவதும் பயணம் செய்து காங்கிரசார் மனநிலை அறிந்து வேட்பாளர் யார் என்பது பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருக்கின்றனர்.
இப்பொழுது அடுத்த கட்ட வியூகமாக ஜெய்ப்பூரில் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ள அம்சங்களில் முதன்மையானது லோக்சபா தேர்தலை எப்பொழுது நடத்துவது என்பதுதான்! இதில் காங்கிரஸ் கட்சியினரிடையே இருவேறு கருத்து நிலவுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து போய் அது லோக்சபா தேர்தலில் எதிரொலித்துப் போய்விட்டதால் முதலுக்கே மோசம் என்பது ஒருசாரார் கருத்து. இதனால் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் பேசாமல் லோக்சபா தேர்தலை நடத்திவிடுவோம் என்பது அவர்களின் எண்ணம். இந்த கருத்தைத்தான் பல காங்கிரசாரும் ஆதரிக்கின்றனர்!
இருப்பினும் முன்கூட்டியே லோக்சபா தேர்தலை நடத்த வேண்டாம் என்று இன்னொரு தரப்பு காங்கிரசார் கருதுகின்றனர். இவர்கள் 2014- பட்ஜெட்டில் மக்களை மயக்கும் நலத் திட்டங்களை அறிவித்தாலே போதும்.. அதுவே தேர்தலுக்கு கை கொடுக்கும் என்கின்றனர்!
இதுஒருபுறம் இருக்க.. யார் பிரதமர் வேட்பாளர் என்ற சிக்கலும் காங்கிரசில் இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றாகிவிட்ட நிலையில் ராகுலைப் பற்றிய முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு இருக்கிறது.
இத்துடன் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்டமைப்பிலும் கூட மாற்றங்கள் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது