வியட்நாம் போறேன் மேடம்: காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்க எஸ்.எம்.கிருஷ்ணா 'சாக்குபோக்கு'!
டெல்லி: வரும் 18ம் தேதி ராஜஸ்தானில் நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா புறக்கணிக்கிறார்.வரும் 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டமான சிந்தன் ஷிவிர் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வெளிநாட்டு கொள்கை குறித்து ஆலோசிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடந்த டிசம்பர் மாதமே நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் தன்னால் ஆலோசனைக் கூட்டத்திற்கு வர முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்திலோ வேறு விதமாகச் சொல்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்கவிருக்கும் கர்நாடகத்தில் தன்னை காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று கிருஷ்ணா எதிர்பார்க்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைமை இது குறித்து எந்த முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனால் தான் அவர் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறார் என்று கூறப்படுகிறது.