பொங்கலுக்கு ஊருக்கு போன தென் மாவட்டத்தினர்: 'காத்து வாங்கும்' சென்னை மின்சார ரயில்கள்
சிங்காரச் சென்னையில் படிப்பு, வேலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றுக்காக வெளியூர்களில் இருந்து வந்து குடியேறிய மக்கள் தான் அதிகம் உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசிப்போர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னையில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் இல்லை.
சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கம் செல்லும் மின்சார ரயில்களிலும் கூட்டம் இல்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கூட்டம் மட்டும் ஓரளவு இருந்தது. சாதாரண நாட்களில் எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான சாதாரண டிக்கெட்டுகள் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். ஆனால் நேற்று எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான சாதாரண டிக்கெட்டுகள் மற்றும் மின்சார ரயில்களுக்கான டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் எளிதில் டிக்கெட் வாங்கிச் சென்றனர்.
இது தவிர சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டமில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் பயணிக்க விருப்போர் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில் மட்டும் கூட்டம் வழக்கம் போல் இருந்தது.