காங்கேயம் காளைகளையும் காணோம்… பொங்கலையும் காணோம்!
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பொங்கல் கொண்டாட்டம் படிப்படியாக மறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் உலகப் பிரசித்தி பெற்ற காங்கேயம் காளைகள் அழிந்து வருவதைப் போல பாரம்பரியம்மிக்க பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களும் அழிந்து வருகிறது என்பது இவர்களின் கவலை.
விளைச்சலுக்கு உதவி புரிந்த இயற்கைக்கும், அதற்கு உதவி புரிந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் இந்த பண்டிகையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டம் சற்று அதிமாக இருந்தது. ஆனால், கொங்கு மண்டலப் பகுதிக்கு உள்பட்ட காங்கயம் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
பொய்த்துப் போன பருவமழை
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் தொடர் மின்தடையால் நசிவுற்ற தொழில்களால் பறிபோன வேலைவாய்ப்புகள், அதனால் குறைந்து போன பணப்புழக்கம், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், காங்கயம் பகுதியில் பொங்கல் கொண்டாட்டம் குறைந்து போனதாக கூறப்படுகிறது.
பிரபலமான காங்கேயம் காளைகள்
காங்கேயம் காளைகள் உலக பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது.
ஆந்திராவில் சிறப்பு வாய்ந்த, "ஓங்கோல்' பசுவுக்கும், கர்நாடக மாநிலத்தில் சிறப்பு வாய்ந்த "ஹெலிகர்' இனக் காளைக்கும் பிறந்த கம்பீரமான இனமே, "காங்கேயம்' இனம். காங்கேயத்தில் இவை அதிகமாக வளர்க்கப்பட்டதால், இதற்கு இத்தகைய சிறப்பு பெயர் பெற்றது.
கம்பீரமான தோற்றம்
காங்கேயம் காளைகளின், முகத்தோற்றம், கொம்பு, கால், திமிழ், பல், தாடை, எலும்பு, தொப்புள், பின்புறம், வால் ஆகியவை மிடுக்காக இருப்பதால், தோற்றத்தில் காங்கேயம் காளைகள் மிரள வைக்கும். ஆரம்ப காலத்தில் காங்கேயம் காளைகள் விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கி வந்தது. அதிக டன் வரை இழுவை திறன் கொண்டு, வலிமை உள்ளதாக விளங்கியதால், காங்கேயம் காளைகள், மாடுகளுக்கு நல்ல மவுசு ஏற்பட்டது.
மாட்டுப்பொங்கலும் உற்சாகமில்லை
உலகின் தொன்மை விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். ஆனால் இந்த காளைகள் தற்போது படிப்படியாக மறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சியினால் காங்கேயம் காளைகளுக்கு சரியான தீவனம் கொடுக்க முடியாமல் விற்பனை செய்து விற்பனை செய்து விட்டனர். எனவே மாட்டுப் பொங்கலும் இந்த ஆண்டு உற்சாகமிழந்து விட்டது.
பண்டிகையை மறக்கலாமா?
வயல்களில் அறுவடை குறைந்ததால் கிராமப்புற மக்கள் பொங்கல் பண்டிகையை மறந்து வருகிறார்கள். ஆனால், நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், கலைக் கல்லூரிகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அறுவடை குறைந்து விட்டதே என்பதற்காக பண்டிகையை புறக்கணிக்காமல் தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் காக்கும் வகையில் அடுத்த தலைமுறைக்கும் நினைவூட்டும் விதமாக அனைவரும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.