புதுவை முதல்வர் ரங்கசாமியின் பெரிய சட்டையும், காலி பாக்கெட்டும்!
புதுச்சேரி யூனியன் பிரதேசம் கூடுதல் வருவாயுடன் திகழ்ந்த மாநிலம்.. ஆனால் சரியான நிர்வாகம் இல்லாத அரசுகளால் இப்பொழுது கையேந்தி நிற்கக் கூடிய மாநிலமாகிவிட்டது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ .180 கோடி மாதந்தோறும் அரசுக்கு தேவைப்படுகிறது. ஆனால் இந்த ரூ180 கோடியை திரட்ட முடியாமல் தற்போது அந்த அரசு திணறுகிறது. பல்வேறு அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதமாக ஊதியமே கிடையாது.
தற்போதைய நிலையில் புதுவை அரசு தனது பிணையபத்திரத்தை கொடுத்து ரூ 390 கோடி கடன்திரட்டி ஊதியத்தைக் கொடுத்துவிட முடியும். ஆனால் இதே நிலை அடுத்தடுத்த மாதங்களுக்கு சாத்தியமில்லை.
யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் அனைத்து கணக்குகளுக்கும் மத்திய அரசின் பொது கணக்கிலேயே இருக்கிறது. மேலும் மத்திய திட்டக்குழு புதுவைக்கு ஆண்டுதோறும் நிதியை ஒதுக்கும். கூடுதலாக புதுவை அரசு செலவு செய்தாலும் அந்த செலவு மத்திய அரசின் பொதுக்கணக்கில் சமன் செய்யப்படும். இந்த நிலை சற்று மாறி. புதுவை அரசியல் கட்சிகள் மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி வருகிறது. இதற்காக புதுவை சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசும் சரி புதுவை அரசுக்கு தனிக் கணக்கு ஒன்றை 2007-ல் தொடங்கியது. இந்த தனிக்கணக்கு தொடங்கியது முதல் கணிசமாக மானியத்தையும் குறைத்துவிட்டது. இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்குளாகத் தொடங்கியது புதுவை அரசு. இதற்காக மத்திய அரசிடம் கடனும் பெற்றது. ஆனால் அந்தக் கடன் அளவும் எல்லை தாண்டிபோய்விட்டது. கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதே நேரத்தில் சரியான நிர்வாகம் இல்லாததால் அரசுக்கான வரி பாக்கி வசூல் செய்யப்படவில்லை. வேறு வழியின்றி அரசு ஊழியர்களின் வைப்பு நிதியில் கை வைத்தது. ஆனாலும் நிலைமை பரிதாபம்தான். இதனால்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தவிக்கிறது.
இப்போதைய நிலைமையில் பேசாமல் முன்பு போல பொதுக்கணக்குத் தணிக்கையில் இணைந்து மாநில அந்தஸ்து கோரிக்கையில் அடக்கி வாசித்தால்தான் தப்பிக்க முடியும் என்ற நிலை! அல்லது மத்திய அரசு உடனடியாக மாநில அந்தஸ்து அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற நிலை! இரண்டில் எதுவும் நடைபெறாவிட்டால் திவால்தேசமாகிவிடும் புதுச்சேரி!
நிதித்துறை செயலர் விவகாரம்
இதனிடையே புதுவை அரசின் நிதி துறை செயலாளராக இருந்த ராஜீவ்யதுவன்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. ராஜீவ யதுவன்சியை ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மாற்றி மூர்த்தி என்பவரை நியமித்திருந்தார். ஆனால் மத்திய அரசோ ராஜீவ் யதுவன்சியை மீண்டும் நியமித்தது. ஆனாலும் ரங்கசாமி அரசு கேட்கவில்லை. மூர்த்தி தொடருவார் என்றே ரங்கசாமி அரசு கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீடு உள்ளது என்றும் ரங்கசாமி கூறிவருகிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பின்னணியில் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகரின் சதி உள்ளது. புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இப்படி நடக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.