அகமதாபாத் ஐஐஎம் இயக்குனரின் ஊதியத்தை ரூ. 1 கோடியாக உயர்த்த முடிவு
அகமதாபாத்: அகமதாபாத் இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM) கல்வி மையத்தின் இயக்குனருக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி ஊதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்களில் பயிலும் மாணவர்களை வேலைக்கு சேர்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஊதியமாக பல கோடிகளைத் தர முன் வருகின்றன. ஆனால், இந்த கல்வி மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வளவு ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் இந்தப் பணிகளில் இருந்து விலகி பன்னாட்டு நிறுவனங்களில் சேரும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் அகமதாபாத் ஐஐஎம் மையத்தின் இயக்குனர் பதவி நீண்ட நாட்களாகவே காலியாக உள்ளது. இந்தப் பணிக்கு சர்வதேச அளவில் மிகச் சிறந்த பன்னாட்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை இழுத்து வர முயற்சிகள் நடக்கின்றன.
ஆனால், அதில் சேர பெரும்பாலான முன்னணி நிர்வாகிகள் முன் வரவில்லை. காரணம், தரப்படும் ஊதியத்தின் அளவு குறைவாக இருப்பதே. இதையடுத்து இந்தப் பதவிக்கான ஊதியத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது ஆண்டுக்கு ரூ. 20 லட்சமாக இருக்கும் இயக்குனரின் ஊதியத்தை 5 மடங்கு அதிகரித்து ரூ. 1 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.