பண்ருட்டி அருகே டாஸ்மாக்கில் மோதல்… பற்றி எரிந்த வீடுகள்.. கரும்புத் தோட்டம் கருகியது!
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தலித் கிராமத்தில் வீடுகள் எரிக்கப்பட்டன. மற்றொரு பிரிவினரின் கரும்பு தோட்டத்திற்கு தீவைக்கப்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக காடம்புலியூர் போலீஸார் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பண்ருட்டி அருகே மேல் இருப்பு என்ற கிராமத்தில் நேற்று மாலை டாஸ்மாக் கடையில் இரு நபர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இது இரு பிரிவினருக்கு இடையேயான ஜாதி மோதலாக மாறியதில், தலித் கிராமத்தினரின் நான்கு வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பதிலுக்கு மற்றொரு தரப்புக்கு சொந்தமான இரண்டு கரும்பு தோட்டங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த மோதலில் 7 பேர் காயமடைந்தனர். இதனால், மேல் இருப்பு கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த மோதலுக்கு காரணமாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தொடர்பாக 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடம்புலியூர் போலீசார் அவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விழுப்புரம் சரக டி ஐ ஜி செந்தாமரைக்கண்ணன், கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராதிகா ஆகியோர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே மேல் இருப்பு கிராமத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் சார்பில் ஆட்சியரின் உடனடி நிதியுதவித் திட்டத்தின்கீழ் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 4 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இவற்றில் ஒரு வீடு இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே தேர்வாகி நிதி உதவி அளிக்கப்படவுள்ளது. மீதம் மூன்று வீடுகளுக்கு மாநில அரசின் பசுமை வீடுகள் உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிப்பு குறித்த விவர அறிக்கை பின்னர் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.