காணும் பொங்கல்: மெரீனாவில் தொலைந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்… பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை கடற்கரை, தீவுத்திடல் பொருட்காட்சியில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களைவிட்டு பிரிந்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காணும் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் இரவு வரை உற்சாகமாக பொழுதை கழித்து விட்டுதான் வீடுகளுக்கு திரும்பினர்.
இருட்டை பயன்படுத்தி குற்றவாளிகள் திருட்டு, சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இரவை பகலாக்கும் வகையில் உயர் கோபுர மின் விளக்குகளும் 3 இடங்களில் பொருத்தப்பட்டிருந்தன. 6 இடங்களில் மேடைகளும், 3 இடத்தில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிப்பதற்காக போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதற்காக கடற்கரை பகுதி முழுவதும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். மெரினாவில் பெற்றோரின் பிடியில் இருந்து விடுபட்டு மாயமான 62 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் மாயமான 2 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தீவுத்திடல் பொருட்காட்சியிலும் காணும் பொங்கல் தினத்தில் கூட்டம் அலைமோதியது. அங்கும் மாயமான 35 குழந்தைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. போலீசார் எச்சரிக்கையை மீறி கடலில் இறங்கியவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் அமைதியாக முடிந்ததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.