காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக் கட்சிகள் மிகவும் முக்கியமானவை: ஜெய்ப்பூரில் சோனியா காந்தி
சிந்தனை அமர்வு
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மூன்று நாள் "சிந்தனை அமர்வு" கூட்டம் இன்று தொடங்கியது. வரும் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் மொத்தம் 350 முக்கிய பிரதிநிதிகள் நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்டுள்ளனர்.
சோனியா பேச்சு
இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடும்படியான வளர்ச்சியை எட்டியுள்ளது. நம்மிடையே மக்களின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இங்கே கூடியுள்ள இளைஞர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியம். நாம் நம்மை சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டிய தருணம் இது. நமது வெற்றி தோல்விகளை ஆராய வேண்டியது அவசியம்.
காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக் கட்சிகள் மிகவும் முக்கியமானவை. நமது கூட்டணிக் கட்சிகள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டியவை.
பெண்களுக்கு எதிரான வன்முறையும் ஒடுக்குமுறையும் மிகவும் அவமானகரமானவை. பாலியல் பலாத்காரம், பெண்சிசு கொலை போன்றவை நம்மை உலுக்குகின்றன. பாலின வேறுபாட்டு பிரச்சனை என்பது பொதுவானதாக இருந்தாலும் இதற்குத் தீர்வு அவசியமானது என்றார் அவர்.
கூட்டத்தின் 2 நோக்கம்
ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கூட்டியிருக்கும் கூட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுபவை இரண்டே விஷயங்கள்தான். லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் அணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது மற்றும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்ற இரண்டு விவகாரங்கள் மட்டுமே பிரதானமாக விவாதிக்கப்பட உள்ளது. தொடக்க உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியாவும் "கூட்டணிக் கட்சிகளை மதிப்பது பற்றியும் "இளைஞர்களின்" எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் இந்த விவகாரத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 3 நாள் கூட்டமானது இந்த கருத்த்களை மையமாக வைத்து நடைபெறும் என்றே கருதப்படுகிறது.