கிலோ அரிசி ரூ3க்கு வழங்க உணவு பாதுகாப்புக்கான பார்லி. நிலைக்குழு பரிந்துரை
தற்போதைய நடைமுறை
நாட்டில் தற்போது நியாயவிலைக் கடைகளில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கு கோதுமை 1 கிலோ ரூ4.15, அரிசி 1 கிலோ ரூ5.65 காசுகள் என்ற வகையில் மாதந்தோறும் 7 கிலோ வழங்கப்பட்டு வருகிறது.
உணவுப் பாதுகாப்பு மசோதாவின்படி...
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மசோதாவின் கீழ் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கோதுமை 1 கிலோ ரூ2, அரிசி 1 கிலோ ரூ3 என்ற வகையில் மாதந்தோறும் 7 கிலோ வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு 1 கிலோ கோதுமை ரூ7க்கும் அரிசி 1 கிலோ ரூ10க்கும் என்ற வகையில் தலா 3 கிலோ வழங்கவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.
பார்லி. நிலைக்குழு பரிந்துரைப்படி
இதனிடையே இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான முட்டெம்வார் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவானது தமது பரிந்துரைகளை சபாநாயகர் மீராகுமாரிடம் அளித்துள்ளது. இதில், வறுமைக்கோட்டுக்கு கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்ற பாகுபாட்டை நீக்கிவிட்டு, அனைவருக்கும் 1 கிலோ கோதுமையை ரூ2, அரிசி 1 கிலோ ரூ3 என்ற வகையில் மாதந்தோறும் 5 கிலோ வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை
இந்தப் பரிந்துரை ஏற்கப்படும் நிலையில் 1 மாதத்துக்கு 7 கிலோ வாங்கிக் கொண்டிருந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோருக்கான அளவு 5 ஆகக் குறையும். என்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.