பெங்களூர்- புதுச்சேரி இடையே மீண்டும் விமான சேவை ஆரம்பம்
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த புதுச்சேரி நகரில் லாஸ்பேட்டை பகுதியில் சிறியவகை விமானங்களுக்கான விமான நிலையம் உள்ளது. கடந்த 1988 ம் ஆண்டு இங்கு விமானசேவை தொடங்கப்பட்டிருந்தது. ஆனால் பொது மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், நான்கு ஆண்டுகளிலேயே இந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது பெருகி வரும் போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொண்டு மீண்டும் விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமான போக்குவரத்தை தொடங்கி உள்ளது. இந்த விமானம் நேற்று பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு முதன் முறையாக 35 பயணிகளுடன் பயணத்தை தொடங்கியது. புதுச்சேரிக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை முதல்வர் ரங்கசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பெங்களூரில் இருந்து பகல் 12.20 மணிக்கு புறப்படும் ஸ்பைஸ்ஜெட், மதியம் 1.10 மணிக்கு புதுச்சேரி வந்து சேரும். புதுச்சேரியில் இருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு, பகல் 2.20 மணிக்கு பெங்களூர் சென்றடையும். புதுச்சேரியை மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.