தர்மபுரி தலித்கள் மீதான தாக்குதல்: சிபிஐ விசாரணை கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல்
சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் தலித்துக்கள் மீதும், அவர்களது சொத்துக்களின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி புதிதாக இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த யாக்கன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் புத்த மதத்தை பின்பற்றும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி, புதுகாலனி ஆகிய இடங்களில் வசித்த தலித் மக்கள் மீதும், அவர்களது உடைமைகள் மீதும் ஒரு பிரிவினர் காட்டுமிராண்டி தாக்குதலை 7.11.2012 அன்று நடத்தினர்.
தலித் சமுதாயத்தினரின் பொருளாதார நிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தலித் சமுதாயத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், மேலவளவு கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த 7 பேர் 30.7.1997 அன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அதேபோல 2003ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் தலித் என்ஜினீயர் ஒருவர் அவரது மனைவியுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தில் தலித் சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தி, பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அழித்துள்ளனர்.
இதை மீடியாக்கள் செய்திகளாக வெளியிட்டும், தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் தமிழக அரசு கண்ணாமூச்சு விளையாட்டு விளையாடுகிறது. மேலும் அரசு உயர் அதிகாரிகளும் சாதி பற்றுடன் செயல்படுவதால், அவர்களும் தலித் மக்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை.இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது, பரமக்குடியில் 11.9.2011 அன்று தலித் சமுதாயத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
30.10.2012 அன்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது, 3 பேர் கொலை செய்யப்பட்டனர். உடனே போலீசார் கண்மூடித்தனமாக தலித் இளைஞர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் உள்ள தலித் சமுதாயத்தை பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர், சமூக நீதித்துறை செயலாளர் ஆகியோருக்கு கடந்த 4.12.2012 அன்று மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.
எனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்டவைகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.மேலும், தலித் மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்குகிறதா என்பதை மத்திய அரசு மேற்பார்வையிட வேண்டும்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக வழங்க மூத்த அதிகாரிகளை நியமிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.தலித் மக்கள் மீதான இந்த தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார் யாக்கன்.
இந்த மனு தலைமை நீதிபதி தர்மாராவ் (பொறுப்பு), நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்கல் குறித்து ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் வரும் பிப்ரவரி 4ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. அந்த மனுக்களுடன், இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.