பொங்கல்: 3 நாளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.5 கோடி வசூல்
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் 5, 612 சிறப்பு பேருந்துகளை இயக்கியது. கடந்த 11ம் தேதி கோயம்பேட்டில் இருந்து 1,290 பேருந்துகள், 12ம் தேதி 1,315 பேருந்துகள், 13ம் தேதி 312 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதே போன்று பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கடந்த 11ம் தேதி 730 பேருந்துகள், 12ம் தேதி 745 பேருந்துகள் மற்றும் 13ம் தேதி 1,230 பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கும். ஆனால் இந்த ஆண்டு சிறப்பு ரயில்கள் இல்லாததால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. கடந்த 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மட்டும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து 1,70,000 பேர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக திருச்சி, மதுரை, கும்பகோணம், நெல்லை, நாகர்கோவிலுக்கு அதிக அளவில் சென்றுள்ளனர்.
இதனால் அந்த 3 நாட்களில் மட்டும் ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மறுமார்க்கம் வருகையில் கிடைக்கும் வருமானம், முன்பதிவு இல்லாமல் பயணிகளை ஏற்றுவது மூலம் கிடைக்கும் வருமானத்தை சேர்த்தால் மொத்த வருமானம் ரூ.5 கோடியைத் தாண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டிகை காலங்களில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதிக வசூல் செய்த 30 ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ரூ.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தீபாவளிக்கு ஒரே நாளில் ரூ.1.15 கோடி வசூலானது தான் இது நாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் பொங்கலுக்கோ ஒரே நாளில் ரூ. 1.30 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் பொங்கல் வசூல் தீபாவளி வசூல் சாதனையை முறியடித்துள்ளது.