அதிக பயணிகளை ஏற்றி உயிர்களை 'காவு' வாங்கும் ஷேர் ஆட்டோக்கள்.. பெர்மிட் ரத்து- ஹைகோர்ட் உத்தரவு
உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், பியாஜியோ என்ற டீசல் ஆட்டோ தமிழகம் முழுவதும் ஷேர் ஆட்டோவாக ஓட்டப்படுகிறது. இந்த ஆட்டோவில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்டதைவிட, பலமடங்கு அதிகமாக 12 பேரை இந்த ஆட்டோவில் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து அதிகம் நடந்து, உயிர் பலி அதிகரித்து வருகிறது.
எனவே இந்த ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஆட்டோக்களுக்கு 2007ம் ஆண்டுக்கு பின்னர் பெர்மிட் வழங்கப்படவில்லை. ஏற்கனவே அனுமதி பெற்றவர்களுடன், அனுமதி பெறாத ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது.
எனவே இந்த ஆட்டோவுக்கும் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக போக்குவரத்து செயலாளர், கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தகுந்த உத்தரவை இந்த நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி தர்மாராவ் (பொறுப்பு), நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
இந்த பொது நல மனுவை விசாரித்து இந்த உயர் நீதிமன்றம் 29.11.2012 அன்று ஒரு விரிவான இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில், பியாஜியோ ஆட்டோவில் எத்தனை பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அதன் டிரைவருக்கும் தெரியவில்லை. பொது மக்களுக்கும் தெரியவில்லை. எனவே தமிழக போக்குவரத்துத்துறை ஆட்டோக்களில் ரகங்கள் பற்றியும், அதில் எத்தனை பயணிகள் பயணம் செய்ய செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து பத்திரிகைகளில் விரிவான விளம்பரம் செய்யவேண்டும்.
பெர்மிட்டை ரத்து:
மேலும், அதன்பின்னரும் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆட்டோவுக்கு வழங்கப்பட்ட பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த உத்தரவையே இறுதி உத்தரவாக பிறப்பித்து, இந்த வழக்கை பைசல் செய்கிறோம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.