அதிர்ச்சியளிக்கும் கல்வித்தரம்… கஷ்டம் தரும் கணக்கு பாடம் … சர்வேயில் தகவல்
டெல்லி: நாடுமுழுவதும் நகரமோ, கிராமமோ தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் மோகம் அதிகரித்து வருவதாக சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. 46 சதவிகித மாணவர்கள் கணித்தப்பாடத்தில் திணறுவதாகவும் தெரிவிக்கிறது அந்த சர்வே. பிராத்தம் என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆரம்பக்கல்வி பற்றி ஆய்வு நடத்தியது. அதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.
ஆங்கில மோகம் காரணமாக அதிகம் பணம் செலவழித்து ஆங்கிலப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோரின் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகரம் மட்டுமல்ல கிராமப்புறங்களையும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன.
டிஜிட்டல் போர்டு, ஆய்வு கூட வசதி, தனித்தனி கம்ப்யூட்டர், கழிவறை, குடிநீர் மற்றும் மதிய உணவு வசதி என இந்த தனியார் பள்ளிகள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளன. ஆனாலும் அவற்றின் கல்வித்தரம் தான் கேள்விக்குறியாக உள்ளது.
தனியார் பள்ளிகளில் ஆர்வம்
கிராமப்புறங்களில் உள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 96.5 சதவிகிதம் பேர் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் ஆர்வம் உள்ளவர்களாகவும் மற்றும் தனியார் பள்ளிகள் வருடந்தோறும் புதிய மாணவர் சேர்க்கையில் 10 சதவீகிதம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது.
50 சதவிகிதம் உயரும் அபாயம்
2012-ஆம் ஆண்டில் 1-ம் வகுப்பு படிக்கும் 30 சதவித கிராமப்புறக் குழந்தைகள் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கை பெற்றுள்ளனர். இந்தப் போக்கில் மாற்றம் கொண்டு வரவில்லையென்றால் 2018-ஆம் ஆண்டுக்குள் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 50 சதவிகிதத்தை எட்டும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பாடத்தை வாசிக்க திணறல்
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 5-ம் வகுப்பு மாணவர்களை பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலான மாணவர்களால் 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாசிக்க முடியவில்லை. மிக எளிய கணிதத்தைக் கூட தீர்க்க முடியவில்லை. இது போன்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் கவலைக்குரிய விஷயம்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா
மாணவர்களின் கணித அறிவு வீழ்ச்சி ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் உள்ளது. பாடப்புத்தகத்தை வாசிக்க முடியாத குழந்தைகள் அதிகமுள்ள மாநிலங்கள் ஹரியானா, பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகும்.
46 % பேருக்கு கணக்கு தெரியலை
கணிதம் தெரியாத மாணவர்கள் 2010-ல் 46.3 சதவிகிதமும், 2011-ல் 51.8 சதவிகிதமும் மற்றும் 2012-ல் 53.2 சதவிகிதமும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2010-ல் 2 இலக்க எண் கணிதத்தைக் கூட தீர்க்க முடியாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 29.1 சதவிகிதமாக இருந்தது. இது 2010-ல் 39 சதவிகிதமாகவும் 2012-ல் 46.5 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் 2012-ஆம் ஆண்டு கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் தனியார் மோகம்
அரசு கல்வித்துறையின் வளர்ச்சிக்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிற போதிலும் சில விஷயங்கள் எதிர்மறையாக செல்கின்றன. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட கிராமப்புற குழந்தைகளின் தனியார் பள்ளி சேர்க்கை 2006-ல் 18.7 சதவிகிதமாகவும், அது 2012-ல் 28.3 சதவிகிதமாகவும் உயர்ந்தது. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த அளவு 56 சதவிகிதத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளியோ அரசுப் பள்ளியோ கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி. தரமான கல்வியைத் தர அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர்கள் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அமைச்சர்கள் சொல்வதென்ன?
ஆனால் மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சர் பல்லம் ராஜு, அரசுப் பள்ளியாகட்டும் அல்லது தனியார் பள்ளியாகட்டும். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம். நமது நோக்கம் நம் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவது தான். மேலும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தரமான கல்வி மற்றும் ஆசிரியர்கள் பற்றி முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.