கேரளாவில் ஓடும் பேருந்தில் பெண் கண்டக்டரை மானபங்கம் செய்த கூலித் தொழிலாளி
திருவனந்தபுரம்: கேரளாவில் இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் பெண் கண்டக்டர் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து தூக்கமூலைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்தில் பெண் கண்டக்டர் பணியில் இருந்தார். பேருந்து புறப்பட்டு கல்லியூர், வெள்ளையன் கோவில் பகுதியில் சென்றபோது பயணிகள் பலரும் இறங்கிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே பேருந்தில் இருந்தனர். அப்போது பேருந்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீர் என்று எழுந்து கண்டக்டர் அருகே சென்றார்.
பின்னர் அவரது கையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயன்றார். வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த பெண் கண்டக்டர் அலறினார். அவரது சத்தம் கேட்டு டிரைவர் பேருந்தை நிறுத்தினார். மற்ற பயணிகள் அந்த வாலிபரை நோக்கிச் சென்றதும் அவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினார்.
அவரை டிரைவரும், பிற பயணிகளும் விரட்டிச் சென்றனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இதைப் பார்த்து மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் சுரேஷ் குமார் என்பதும், அவர் கூலித் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் பாப்பனாங்கோடு போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.