டாஸ்மாக் கடையை ஏன் மாத்துனீங்க.. மகள்களுடன் உண்ணாவிரதத்தில் குதித்த எம்.எல்.ஏவின் மாமியார்
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் டாஸ்மாக் மதுக் கடையை யாரைக் கேட்டு மாற்றினீர்கள் என்று கேட்டு தேமுதிக எம்.எல்.ஏவின் மாமியார் தனது மகள்களுடன் உண்ணாவிரதத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுக் கடைகளை மூட வேண்டும் என்று கோரி பாமகவினர் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகளும் போராடி வருகின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே வைக்கப்படும் கடைகளை அகற்றக் கோரியும் போராட்டங்கள் நடந்தபடி உள்ளன.
இந்த நிலையில், யாரைக் கேட்டு டாஸ்மாக் கடையை எங்களது பகுதியிலிருந்து மாற்றினீர்கள் என்று கேட்டு ஒரு போராட்டம் பல்லடத்தில் நடந்துள்ளது. இதில் ஈடுபட்டது 3 பெண்கள். அதுவும், தேமுதிக எம்.எல்.ஏவின் மாமியார் மற்றும் மச்சினிகள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தினகரன். இவரது மாமியார் சரஸ்வதி. இவர் தனது மகள்கள் திவ்யபாரதி மற்றும் தனுசியா ஆகியோருடன் பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
தங்களது பகுதியிலிருந்து டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ததைதக் கண்டிப்பதாக கூறிய சரஸ்வதி, அதிமுகவினரின் தூண்டுதலே இந்த கடை மாற்றத்துக்குக் காரணம் என்றும், மீண்டும் கடையை தங்களது பகுதிக்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரியபடி கோஷமிட்டதால் பரபரப்பாகி விட்டது தாசில்தார் அலுவலக வளாகத்தில்.