'சமரசமற்ற சமரே... தஞ்சை மகிழ்கிறது இப்போது... தமிழகம் மகிழ்வது எப்போது?: கலக்கிய "எம்.என்" பேனர்கள்!
எம்.நடராஜன் தமது தந்தை மருதப்பா அறக்கட்டளை மூலம் தஞ்சாவூரில் ஆண்டுதோறும் கலை இலக்கிய நிகழ்வாக பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ஜெயலலிதா அரசால் 90 நாள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு திரும்பியிருப்பதால் சீறிய சிங்கமாக இந்தக் கூட்டத்தில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதற்கேற்ப பேனர்களும் தஞ்சையை கலக்கியிருந்தன.
வழக்கம் போல இந்த ஆண்டும் நிகழ்ச்சிக்கு ஈழக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் இலங்கை இனப்பிரச்சனையும் எட்டிப்பார்த்தது. பின்னர் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா நடராஜன் பேச வந்தார்.
அப்போது, "நான் நல்லது செய்தால், எழுத மாட்டார்கள். நான் வாய் தவறி ஏதாவது ஒரு வார்த்தை பேசிவிட்டால், அதையே நான்கு நாட்களுக்கு 24 மணி நேரமும் போடுவார்கள். நான் எதுவும் தீனி போடுவேனா, மாட்டேனா என்று காதைத் தீட்டி வைத்திருக்கிறார்கள்'' என்று காட்டத்துடன் தொடங்கி கருணாநிதி, சிதம்பரம் அனைவரையும் ஒருபிடிபிடித்தார். சரி ஜெயலலிதாவை எப்படியும் விமர்சிப்பார்தானே என்று எதிர்பார்த்தோருக்கு 'அல்வா' கொடுக்கும் வகையில் நானும் புரட்சித் தலைவியும் காவிரி நீர் கோரி ராஜீவிடம் மனு கொடுத்தோம் என்று பேச ‘சப்'பென்று ஆகிவிட்டது கூடியிருந்தோருக்கு!
பின்னர் என்ன நினைத்தாரோ திடீரென, 'என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்கிறேன். தேர்தல் வரும்போது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறேன்" என்று மறைமுகமாக பொடி வைத்து பேசிய கையோடு எஸ்கேப்பாகிவிட்டார் எம்.என்.!