பழனி தைபூசம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: 27ல் தேரோட்டம்
பழனி: பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 26ம் தேதி திருக்கல்யாணமும், 27ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படுவது பழனி. இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப் பூசம் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். மேலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்துக்கு வருவது வாடிக்கை.
பத்துநாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நேற்று காலை 10 மணிக்கு பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி கொடிகட்டி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர், வீரபாகு ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கொடிமரம் முன்பாக பூஜைகள் நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டனர்.
தை பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 26ம் தேதி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் வள்ளி&தெய்வானையம்மன் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 27ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாள் வாகனத்தில் சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரோட்ட நிகழ்ச்சியும், மாலை 4.20 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 28ம் தேதி இரவு 8 மணிக்கு வையாபுரி கண்மாயில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 30ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறும் அன்று இரவு 11.30 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.