இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு குறையுமா?
அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை அரசு 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. வரியை உயர்த்தினாலாவது தங்கத்தின் பயன்பாடு குறையும். அதன் பிறகு தங்க இறக்குமதியும் குறையும் என்ற நம்பிக்கையில் தான் அரசு இவ்வாறு செய்துள்ளது. இறக்குமதி குறைந்தால் அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறையும். வரும் மார்ச் 31ம் தேதிவாக்கில் இந்தியாவின் தங்க இறக்குமதி 38 பில்லயன் டாலர்களைத் தொடும் என்று கூறப்படுகிறது.
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியால் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே போனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அதிக அழுத்தம் ஏற்படும். வரியைக் கூட்டினால் தங்க இறக்குமதியும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறையும் என்பது அரசின் நினைப்பு.
ஆனால் இந்தியாவின் இந்த முடிவால் தங்கம் சட்டவிரோதமான வழிகளில் செல்லும் என்று வர்த்தக நிறுவனமாக நொமுரா தெரிவித்துள்ளது.
இது குறித்து ரித்திசித்தி புல்லியன்ஸ் லிமிடெட்டின் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி கூறுகையில்,
இறக்குமதி வரியை உயர்த்தியுள்ள அரசின் முடிவு புல்லியன் பிரிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய வரிவிதிப்பின்படி ஒரு கிலோ தங்கத்திற்கு கூடுதலாக ரூ.60,000 வரியாக செலுத்த வேண்டும். இந்த வரி உயர்வால் தங்க இறக்குமதியில் சட்டவிரோத செயல்பாடுகள் அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால் தங்க நகைகள் செய்யும் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். மேலும் உள்ளூரில் நகை வியாபாரம் செய்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அப்படி விலை அதிகரித்தும் தங்கத்தின் இறக்குமதியும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இறக்குமதி வரியை உயர்த்தினாலாவது தங்கத்தின் பயன்பாடு குறைகிறதா என்று பார்க்க அரசு இவ்வாறு செய்துள்ளது.