எப்டிஐ பெயரில் 'அரசியல் கண்ணாமூச்சி' நடத்துகிறீ்ர்களா?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: சில்லறை வணிகத்தில் உண்மையிலேயே நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளதா? அல்லது அரசியல் கண்ணாமூச்சி நடத்துகிறீ்ர்களா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
பெரும் எதிர்ப்புகள், களேபரங்கள், நாடாளுமன்றத்தில் பெரும் நாடகங்களுக்கு மத்தியில்
சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இது தொடர்பான அரசு அறிவிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஆர்.எம்.லோதா, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி ஆஜரானார்.
வாஹன்வதியின் வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்து 6, 7 வாரங்கள் ஆகிவிட்டன. உண்மையிலேயே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஏதுவது வந்துள்ளதா? அல்லது வெறும் அரசியல் கண்ணாமூச்சி நடத்துகிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த கொள்கையால் பயன் கிடைத்துள்ளதா? என்றும் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த வாஹன்வதி, இது ஒரு கொள்கை முடிவு. இது போன்ற பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடரும். இந்த சீர்திருத்தங்களின் பலன் உடனடியாகக் கிடைத்துவிடாது.. சிறிது காலம் ஆகும். இந்த முதலீடுகளால் நாடும், மக்களும், சிறு வியாபாரிகளும் பலன் பெருவர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து கொள்கை முடிவுகளுமே புனிதமானவையோ அல்லது மீற முடியாதவையோ அல்ல. ஒரு கொள்கை நியாயமானதா? அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டதா? என்பதை ஆராயும் உரிமை நீதிமன்றத்துக்கு உண்டு.
இந்த கொள்கையின் மூலம் சிறு வியாபாரிகளின் நலன் பாதிக்காத வகையில் மத்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது? விலைகளை குறைப்பதற்காக பெரிய நிறுவனங்கள் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கையில் இறங்கினால், சிறு வியாபாரிகளின் நிலை என்னவாகும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த பிரச்சனை குறித்து பிரமாணப் பத்திர தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
சிறு வியாபாரிகளின் பாதுகாப்பை வற்புறுத்தி கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றத்துக்கு அகில இந்திய வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.