பிரதமரை அடிப்பேன்னு சொல்லலை, அடிக்கவா முடியும்னுதான் சொன்னேன்...மமதா
கொல்கத்தா: நிதி வழங்காவிட்டால் பிரதமர் மன்மோகன் சிங்கை அடிப்பேன் என்று நான் சொல்லவே இல்லை. நிதிகொடுக்காவிட்டால் என்ன செய்ய முடியும், அடிக்கவா முடியும் என்று கேள்வியாகத்தான் கேட்டேன். அதில் தவறு ஏதும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், பிரதமரை அடிப்பது என்று நான் பேசவில்லை. ஊடகத்தின் ஒரு பிரிவினர் தங்களின் சுயநலத்துக்காக நான் கூறியதை மாற்றி வெளியிட்டுள்ளனர். பிரதமரை பல முறை சந்தித்தும் பலன் ஏதுமில்லை. இதற்கு மேல் அவரை நான் அடிக்கவா முடியும்? என்றுதான் பேசினேன். ஆனால் நான் பிரதமரை தாக்க இருக்கிறேன் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறானது.
ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும். மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய் தகவல்களை கூறக் கூடாது. ஜனநாயக நாட்டில் நான் பிரதமரை சந்தித்துப் பேசத்தான் முடியுமே தவிர, நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதற்காக அவரை எதுவும் செய்ய முடியாது. இதைத்தான் பிரதமரை அடிக்கவா முடியும் என்று கேள்வியாக எழுப்பினேன். இதில் தவறு ஏதுமில்லை என்றார் அவர்.
முன்னதாக மமதாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.