கோவாவில் விசாரிக்கும் சாக்கில் பெண்ணை மானபங்கப்படுத்திய போலீஸ்காரர்
பனாஜி: கோவாவில் விசாரணை என்ற பெயரில் பெண்ணை மானபங்கப்படுத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள மபுசா நகரைச் சேர்ந்தவர் கான்ஸ்டபிள் பிரஷாந்த் தவாஸ்கர்(30). அவர் மீது 6 வயது பெண் குழந்தையின் தாய் மபுசா போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
என் கணவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தவாஸ்கர் உள்பட 5 போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எங்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது எனது கணவர் வீட்டில் இல்லை. நானும் எனது 6 வயது மகளும் மட்டும் தான் இருந்தோம். தவாஸ்கர் விசாரணை நடத்துகிறேன் என்ற பெயரில் என் உடல் முழுவதும் பரிசோதனை செய்கிறேன் என்று என்னை மானபங்கப்படுத்திவிட்டார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தவாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. விஷ்ரம் போர்கர் கூறுகையில்,
தவாஸ்கரை கைது செய்து, சஸ்பெண்ட் செய்துள்ளோம். அந்த பெண் மீது எந்த புகாரும் இல்லாமல் அவராக விசாரணை நடத்தியுள்ளார் என்றார்.
தனது கணவர் போலீசாருக்கு பணம் தர வேண்டும் என்று கூறி அந்த 5 பேரும் நள்ளிரவில் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.