நெல்லையில் வேகமாகப் பரவும் சிக்குன்குனியா: பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சிக்குன்குனியா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்நிலையில் தற்போது சிக்குன்குனியா காய்ச்சல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாங்குநேரியை அடுத்துள்ள உன்னங்குளத்தில் உள்ள பெரும்பாலானோர் சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கலெக்டர் சமயமூர்த்தி, சுகாதார இணை இயக்குநர் உமா உள்ளிட்டோர் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் பகுதியில் உள்ள தோரகுளம். பட்டர்புரம், கோவன்குளம் உள்ளிட்ட சில கிராமங்களிலும் சிக்குன்குனியா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இக்காய்ச்சலால் பாதிக்கபட்டு இன்னும் அதிலிருந்து முழுவதுமாக தேராமல் தவித்து வரும் மக்கள் மீண்டும் இக்காய்ச்சல் பரவி வருவதால் அச்சத்தில் உள்ளனர்.