சீனாவில் 2000 குழந்தைகளை பெற்றோரிடம் இணைத்த டி.என்.ஏ டெஸ்ட்:
சீனாவில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. பணத்திற்காக கடத்திச் செல்லப்பட்டு, நிற்கதியாக விடப்படும் சிறுவர்கள் அங்கு அதிகம். அதேபோல் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, மனம்போன போக்கில் சுற்றித் திரியும் சிறுவர்களும் அங்கு அதிகம்.
இதற்காக கடந்த 2009-ஏப்ரல் மாதம் முதல் சீனாவில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்கள் மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கும் பெற்றோர்களின் மரபணுக்களை போலீசார் சேகரித்துக் கொள்கின்றனர்.
அதேபோல் தெருவில் சுற்றித் திரியும் சிறுவர்களை பிடித்து வைப்பதுடன் அவர்களின் மரபணுக்களையும் சோதித்து சேகரித்து வைத்துக் கொள்கிறது சீன அரசு. இந்த இருவரின் மரபணுக்களையும் பொருத்தி பார்த்து யாருடைய மரபணு பெற்றோருடன் பொருந்துகிறதோ அந்த சிறுவர்கள், குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்படுகிறார்கள்.
இந்த புதிய திட்டத்தின்படி இதுவரை 2,348 சிறுவர்கள், தங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 521 சிறுவர்கள் இவ்வகையில் தங்களின் குடும்பத்தாருடன் இணைந்துள்ளனர். சிறுவர்களின் நிறம், உருவம் போன்றவை பல ஆண்டு கால பிரிவில் மாறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மரபணு என்பது என்றென்றுமே மாறாது எனவேதான் இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர்களுடன் இணைந்துள்ளனர் சிறுவர்கள்.
இதுகுறித்து சீன அரசின் குழந்தை கடத்தல் தடுப்பு அமைச்சகத்தின் இயக்குனர் சென் ஷிகு, "இந்த மரபணு மாதிரிகளின் மூலம், நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்குள் உடனடியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. இதன் மூலம், பல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் பெற்றோர்களுடன் பிள்ளைகள் சேர்ந்து வாழ்கின்றனர் என்றார்.