கடும் நிதி நெருக்கடி: புதுவை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால், பிஸ்கட் நிறுத்தம்
புதுச்சேரி: புதுவையில் நிலவி வரும் கடும் நிதி நெருக்கடி காரணமாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பால் மற்றும் பிஸ்கட் நிறுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ-மாணவியருக்கும் தினமும் 2 வேளை பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. ரொட்டி மற்றும் பால் என்ற இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது.
தற்போது புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் கூட்டுறவு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் உள்ளது. இந்நிலையில் தான் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பால் மற்றும் பிஸ்கட் திட்டத்தில் கை வைத்துள்ளது.
அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் கடந்த 21ம் தேதி திறக்கப்பட்டன. அன்றில் இருந்து காலையில் மட்டும் தான் பாலும், பிஸ்கட்டும் வழங்கப்படுகிறது. மாலையில் வழங்கப்படும் பால், பிஸ்கட் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்வித் துறை கொள்முதல் செய்ததில் பாலுக்கு ரூ.6 கோடி பாக்கியும், பிஸ்கட்டுக்கு ரூ.60 லட்சம் பாக்கியும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு வேளை கிடைத்த பால், பிஸ்கட் தற்போது ஒரு வேளையாக குறைக்கப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.