'மிஸைல்' விட்டு அமெரிக்க கண்ணில் மண்ணைத் தூவி அணு குண்டு 'போட்ட' இந்தியா!
டெல்லி: வாஜ்பாய்க்கு முன்பாகவே நரசிம்ம ராவ் 1996ம் ஆண்டு அணு குண்டுச் சோதனைக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அந்த சோதனையை நடத்த முடியாமல் போனது என்று கூறியுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
இந்தியா இதுவரை 3 முறை அணு குண்டுப் பரிசோதனையை நடத்தியுள்ளது. முதல் பரிசோதனை 1974ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பொக்ரானில் நடந்தது. சிரிக்கும் புத்தர் அதாவது ஸ்மைலிங் புத்தா என்பது இதன் ரகசிய வார்த்தை.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேராத ஒரு நாடு அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதப் பரிசோதனையை நடத்தியது அதுவே முதல் முறையாகும் என்பதால் அப்போது இது பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் 1998ம் ஆண்டு 2வது மற்றும் 3வது அணு ஆயுதப் பரிசோதனையை அடுத்தடுத்த நாட்களில் இந்தியா அதே பொக்ரானில் நடத்தியது. சக்தி என்பது இந்த சோதனைக்கு இந்தியா வைத்த பெயர். படு ரகசியமாக இந்த சோதனையை நடத்தி அமெரிக்காவை அதிர வைத்தது வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு.
ஆனால் உண்மையில் இந்த சோதனையை பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில்தான் இந்தியா நடத்தியிருக்கும். ஆனால் அது ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டதாக கூறியுள்ளார் இந்த சோதனையை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தற்போது தெரிவித்துள்ளார்.
ரா அமைப்பின் கூட்டம் ஒன்றில் இதுகுறித்து கலாம் கூறியுள்ளதாவது...
திடீரென அழைத்த ராவ்
1996ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவடைந்திருந்த நேரம். தேர்தல் முடிவு வருவதற்கு 2 நாட்களே இருந்தன. இந்த நேரத்தில் என்னை அழைத்தார் பிரதமர் நரசிம்ம ராவ். அப்போது நான் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்தேன். நாம் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார் ராவ்.
தப்புக் கணக்காக போனது
அதற்கு நானும் சரி என்றேன். இதையடுத்து அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுமாறு அவர் உத்தரவிட்டார். ஆனால் ராவ் ஒரு தப்புக் கணக்கைப் போட்டு விட்டார். அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ராவ் தனது பதவியை இழக்க நேரிட்டது. இதனால் அவரது அணு ஆயுத சோதனைக் கனவு தகர்ந்து போனது.
வியப்படைய வைத்த ராவின் ஆலோசனை
ஆனால் நரசிம்மராவ் தேர்தல் முடிவுக்குப் பின்னரும் கூட என்னை மீண்டும் கூப்பிட்டு என்னிடம் கூறியது என்னை வியப்படைய வைத்தது. அணு ஆயுத சோதனையை நிறுத்த வேண்டாம். இதுகுறித்து அடுத்து பிரதமராக வந்த அடல் பிகாரி வாஜ்பாயிடம் சொல்லி அதை நடத்துங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டார் ராவ்.
நரசிம்மராவின் பெரும் மனது
நரசிம்ம ராவின் இந்த வார்த்தையைக் கேட்டதும் நான் வியந்து போனேன். தனி நபரின் சாதனையை விட, நாட்டின் நலனே பெரிது என்பது ராவின் வார்த்தைகளில் பளிச்சிட்டது. இது நாட்டுக்கு அருமையான செய்தியும் கூட.
13 நாட்களில் முடிந்த முதல் வாஜ்பாய் அரசு
ஆனால் வாஜ்பாயிடம் இதுகுறித்துப் பேச அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் அந்த அரசு 13 நாட்களிலேயே முடிந்து போனதால். பின்னர் வந்த பிரதமர்களிடமும் இதுகுறித்து விவாதிக்க முடியவில்லை.
வாஜ்பாய் போட்ட ஆர்டர்..
1998ம் ஆண்டு வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். அப்போது அவரிடம் இதுகுறித்து விரிவாகப் பேச முடிந்தது. அதைக் கேட்ட அவர் நமக்கு முதல் வேலையே இதுதான். உடனே ஆரம்பியுங்கள் என்று உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவ
அணு ஆயுத சோதனையை நடத்துவதை அமெரிக்கா கண்டுபிடித்து விடக் கூடாது என்று கவனமாக இருந்தோம். பொக்ரானில் நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்து அதை நடத்தினோம்.
நம்ப வைக்க போட்ட டிராமா...
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை ஏமாற்ற ஏகப்பட்ட செட்டப்களைச் செய்தோம். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.
சண்டிபூரில் திரிஷூலை வைத்து ஒரு டிராமா
அடுத்த இரண்டு நாட்கள் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டோம். அடுத்த நாள் அமாவாசை ஆகும். எனவே இரண்டு நாட்களுக்கு நிலவொளி இருக்காது. ஒருபக்கம் உலகம் தூங்கிக் கொண்டிருந்தது. மறுபக்கம், ஒரிஸ்ஸாவின் சண்டிபூர் ஏவுகணைத் தளத்திலிருந்து அடுத்தடுத்து 12 திரிஷூல் ஏவுகணைகளை ஏவினோம். அதாவது 2 மணி நேரத்திற்கு ஒரு ஏவுகணை என ஏவினோம்.
பொக்ரானில் அணு ஆயுத 'தீபாவளி'
மறுபக்கம் பொக்ரானில் 'பினாகா' டைப் ஏவுகணைகளை நிறைய கைவசம் தயார் நிலையில் வைத்து அடுத்தடுத்து ஏவினோம். அதேசமயம், மாலைவாக்கில் பரிசோதனைக்காக உருவாக்கப்பட்டிருந்த ரன்வேக்களை இந்திய விமானப்படையின் விமானங்கள், ரன் வே தகர்ப்பு குண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கி பெரும் புகை மண்டலத்தை ஏற்படுத்தின.
தனது செயற்கைக் கோள்கள் மூலம் இதைக் கண்காணித்த அமெரிக்கா இதை ஏவுகணை சோதனை, போர் ஒத்திகை என நினைத்தது. அதற்கு மத்தியில்தான் இந்தியாவின் 2வது அணு ஆயுத பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று கூறியுள்ளார் கலாம்.